LGBTQIA+ சமுதாயத்தினரின் சமூகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும், திருமணம் செய்துகொள்வது மற்றும் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது போன்றவற்றில் இருக்கும் பிரச்னை குறித்தும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, திருமணங்கள் பதிவுசெய்வது, இட ஒதுக்கீடு வழங்குவது சார்ந்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
LGBTQIA+ சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும், அதன் மூலம் ஒவ்வொரு முறையும் இட ஒதுக்கீடு கோரி அவர்கள் நீதிமன்ற கதவுகளை தட்ட வேண்டிய நிலை ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், திருநங்கையர், ஒரே பாலினர் திருமணங்களை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ள போதிலும், அந்த திருமணங்களை பதிவு செய்யும் போது அவர்கள் பல சவால்களை சந்திப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, ஒரே பாலினர், திருநங்கையர் திருமணங்களை, இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்கும் வகையில், பதிவாளர்களுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.