ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கையை தடை செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளராக நின்ற இன்பதுரை தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. பின்னர் ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தடையில்லை என உத்தரவிட்டது. மறு வாக்கு எண்ணிக்கை எப்போது என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கும் நிலையிலும், இதுவரை இடைக்கால தடை எதுவும் விதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம், இன்பதுரை மனுவை நிராகரித்துவிட்டது. அத்துடன் நாளை காலை 11.30 மணிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் கடந்த 2016 மே மாதம் 16 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் மே 19ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மொத்தம் 21 சுற்றுகளாக நடத்தப்பட்ட நிலையில் 18 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்தப்பட்டதாகவும், கடைசி 3 சுற்றுகள் சரிவர எண்ணப்படவில்லை என்று திமுக வேட்பாளர் அப்பாவு நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடைசி சுற்றுகளில் பதிவான வாக்குகளையும், தபால் வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் இன்பதுரை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டியலில் வரும்போது விசாரணைக்கு ஏற்கப்படும் எனக்கூறி அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.