தமிழ்நாடு

நளினிக்கு ஒரு மாதம் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

நளினிக்கு ஒரு மாதம் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

webteam

நளினி மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுக்காக 6 மாதம் பரோல் கேட்ட நிலையில் ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி‌கள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அரசு, பாதுகாப்பு காரணங்களால் ஆஜர்படுத்த இயலாது என எவ்வாறு கூற முடியும் என்று கூறி நளினியிடம் தகவலை பெற்று தர சிறைத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். காணொலி மூலம் ஆஜராக நளினி விரும்பாததாகவும், நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 5-ஆம் தேதி மதியம் 2 மணி 15 நிமிடத்திற்கு நளினியை ஆஜர்ப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

அதன்படி இன்று மதியம் நளினி நீதிமன்றத்தில் ஆஜராகி நேரில் வாதாடினார். அப்போது “தானும் தன்னுடைய கணவரும் 28 ஆண்டுகளாக சிறையில் தான் உள்ளோம். எங்களுக்கு சிறையில் தான் பெண் குழந்தை பிறந்தது. எனது மகளை பாராட்டி சீராட்டி நான் வளர்க்கவில்லை. வீட்டில் உள்ள பெரியோர்கள் தான் அவளை வளர்த்து வருகின்றனர். தற்போது தன்னுடைய மகளுக்கு திருமணம் நிச்சயிக்க ஏற்பாடுகள செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக தனக்கு 6 மாதம் பரோல் வழங்க வேண்டும்.

இதுவரை மூன்று முறை பரோலில் வந்திருக்கிறேன். நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கடைபிடித்திருக்கிறேன். தன்னுடைய தந்தையார் இறந்தபோது வந்தேன். அப்போது நாளொன்றுக்கு 16,300 ரூபாய் செலவு செய்தேன். தற்போது தன்னிடம் வசதி இல்லாததால் அதை அரசே ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 

இதையடுத்து வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் நடராஜன், 6 மாதம் பரோல் வழங்க முடியாது எனவும் ஒரு மாதம் வழங்க சாத்தியக்கூறுகள் உள்ளன எனவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் நளிக்கு ஒரு மாத பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.