பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய செய்து தனித்தேர்வு எழுதும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் வெற்றிபெற்றதாக அறிவிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ததில் மாணவர்கள் யாருக்கும் தொற்று இல்லை எனவும் அரசுத்தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிமன்றம் பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்குகான தேர்வுக்கு தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் நாளை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு நடத்தியவிதம் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.