தமிழ்நாடு

அத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளும் தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் 

அத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளும் தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் 

webteam

அத்திவரதர் தொடர்பான 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்திற்கு மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும், வரதராஜப் பெருமாள் சன்னதியை மூடக் கூடாது, வைபவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், தரிசனம் செய்ய வருபவர்களுக்கு குளிர்சாதன வசதிகள் வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், நீதிபதி கள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  

அப்போது அரசு தரப்பில் ஆஜராகிய கூடுதல் தலைமை வழக்கறிஞர், அத்திவரதர் வைபவத்தில் மரணமடைந்த 22 வயது இளைஞர் உள்பட 6 பேரும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கவில்லை என வாதிட்டார். தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பியபோதே இறந்ததாகவும், அவர்கள் 6 பேருக்கும், ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்துள்ளது என்றும் விளக்கம் அளித்தார். 

ஆடிப்பூரம் விழா தொடங்க உள்ளதால், மூலவர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளையும் தரிசிக்க பக்தர்களை அனு மதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தமிழக அரசின் பதிலை ஏற்று அத்திவரதர் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.