தமிழ்நாடு

தேவைப்பட்டால் எஸ்மாவை பயன்படுத்துங்கள்: உயர்நீதிமன்றம்

Rasus

மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தேவைப்பட்டால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மருத்துவ மேற்படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கக் கோரி கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தமிழக அரசு தடுக்காதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த பிரச்னை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பிற்பகலில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜரானார். அப்போது மருத்துவர்கள் தொழிலாளர்கள் அல்ல, மருத்துவர்கள் கடவுள் போல என கருத்து தெரிவித்த நீதிபதிகள், அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவர்களுக்கு அவகாசம் அளித்து பேச்சுவார்த்தை நடத்துங்கள் என அரசுக்கு அறிவுறுத்தினர். தேவைப்பட்டால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து மருத்துவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என நம்புவதாகவும் அவர்கள் கூறினர். பின்னர் வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பின் வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர், நோயாளிகளுக்கான மருத்துவ சேவை பாதிக்கப்படாது என நீதிமன்றத்தில் உறுதியளித்ததாக கூறினார். பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நீதிபதிகள் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.