தமிழ்நாடு

சென்னை: வார விடுப்பு வழங்காமல் அலைக் கழித்ததாக தலைமை காவலர் தற்கொலை முயற்சி

kaleelrahman

சென்னையில் வார விடுப்பு அளிக்காமல் அலைக் கழித்ததாக கூறி காவல் நிலையம் முன்பு தலைமை காவலர் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் செந்தில் குமார், கடந்த 2002 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர், கடந்த சில மாதங்களாக வார விடுப்பு அளிக்காமல் அலை கழிக்கப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் எழுத்தராக பணியில் இருக்கும் ஞான சேகர் என்பவர் தனக்கு அனுசரித்து செல்லும் போலீசாருக்கு மட்டும் வார விடுப்பு அளிப்பதாகவும், மற்றவர்களுக்கு விடுப்பு வழங்காமல், வாட்ஸ்ஆப் குழுவில் அவர்களை பற்றி அவதூறு பரப்புவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் செந்தில்குமார் என்ற தலைமை காவலர் வாட்ஸ்ஆப் குழுவில், நீங்கள் செய்வது முறையல்ல, இதனால் பல போலீசார் மன உளைச்சலில் இருப்பதாக பதிவிட்டுள்ளார். இது குறித்து ஆய்வாளர் சந்திர மோகனிடம் முறையிட்டும் பயனில்லாமல் போனதானால், விரக்தியில் இருந்த செந்தில் குமார் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனைக் கண்ட சக போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

தகவலறிந்து அங்கு வந்த கிண்டி உதவி ஆணையர் சிவா, அவரது அலுவலகத்தில் வைத்து செந்தில்குமார் மற்றும் எழுத்தர் ஞான சேகரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.