தமிழ்நாடு

8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

webteam

சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பு கூறியுள்ளது. 

சேலம் 8 வழி பசுமைவழி சாலை திட்டம், சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் வழியே அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையப்படுத்துவதை எதிர்த்து, பூ உலகின் நண்பர்கள், நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சென் னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை டி.எஸ் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடைபெற்று வந்தது.

மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்த பின்னர்தான் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும், தற்போது நில அள வீடு பணி மட்டுமே நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது. அனுமதி கிடைத்த பின்னர்தான் முழுமையாக நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 14ஆம் தேதி வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று காலை நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என்று  நீதிபதிகள் பரபரப்பு  தீர்ப்பளித்தனர்.

இதுபற்றி விவசாயி தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் கூறும்போது, ‘’ இந்த திட்டத்தின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை, 8 வாரத்தில் பழைய நிலைக்கு கொண்டு வந்து சம்மந்தப்பட்ட விவசாயிகளிடம் நிலத்தை வழங்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்றபின் தான் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அவசரகதியில் கொண்டு வரப்பட்ட திட்டம்  இது என்று நீதிபதிகள் தீர்ப்பளித் தனர்’’ என்றார்.