திருச்சியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. திருச்சியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக சட்டத்திற்கு புறம்பாக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை, மாவட்ட ஆட்சியர், டிஜிட்டல் பேனர் ஒழுங்குமுறை குழுவிடம் கடந்த 20 ஆம் தேதி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என டிராபிக் ராமசாமி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருச்சியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அனுமதி பெற்று வைக்கப்பட்ட பேனர்கள், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் எவ்வளவு என்பது பற்றி இன்று மாலை 4 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.