தமிழ்நாடு

தென்னை மரத்தால் மன உளைச்சல்.. கோர்ட்டை நாடிய மனுதாரர்.. அசத்தல் உத்தரவு போட்ட நீதிபதி!

JananiGovindhan

அண்டை வீட்டில் வளர்க்கப்படும் தென்னை மரத்தால் இடையூறு ஏற்படுவதால் அதனை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் தாக்கல் செய்த மனுவில், தனது வீட்டின் சுற்றுச்சுவைரை ஒட்டியுள்ள அண்டை வீட்டில் தென்னை மரம் வளர்க்கப்படுவதாகவும், அதிலிருந்து விழும் தேங்காய்களால் தனது வீட்டின் மேற்கூரை சேதமடைகிறது.

இப்படியாக தொடர்ந்து நிகழ்வது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ஆகவே பக்கத்து வீட்டில் வளர்க்கக் கூடிய தென்னை மரத்தை அகற்றக் கோரி வருவாய் அதிகாரியிடம் மனு அளித்திருந்தேன். அதனை ஏற்றுக்கொண்ட வருவாய் அதிகாரி, தென்னை மரத்தை அகற்ற கடந்தாண்டு அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் வருவாய் அதிகாரி உத்தரவுப்படி தென்னை மரம் அகற்றப்படவில்லை என்பதால் மரத்தை அகற்ற டி.எஸ்.பி.க்கு உத்தரவிட வேண்டுமென கேட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இதனை விசாரிக்க ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி தென்னை மரம் வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான கலியமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படாததால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தென்னை மரத்தை வெட்டி அகற்றுமாறு தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மேலும், தமது சொத்தை பாதுகாக்க மனுதாரருக்கு உரிமை உள்ளதாக கூறியுள்ள நீதிபதி, வெட்டப்படும் தென்னை மரத்திற்கு பதிலாக கொய்யா மரம் வைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.