தமிழ்நாடு

15 வயது சிறுவன் 17 வயது சிறுமி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Sinekadhara

ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்ளும் நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் 15 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால் பதிவான வழக்கில் சிறுவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்த திருவள்ளூர் சிறார் நீதி குழுமம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் காவல்துறையினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திய டிஜிபி சைலேந்திர பாபுவின் பதிவு ஆறுதலளிக்கும் வகையில் உள்ளது எனவும், ஊரடங்கு காலத்தில் பெற்றோருடன் நெருக்கம் குறைந்து, மின்னணு சாதனங்களில் மூழ்கிய குழந்தைகள், கொரோனாவை விட கொடிய தொற்றாக மனதை கெடுத்துக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். காதல் என்பது இதிகாச காலங்களில் இருந்து சமூகத்தில் தொடர்ந்து வந்தாலும், காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து திருவள்ளூர் சிறார் நீதி சிறுவனுக்கு மூன்றாண்டுகள் விதித்திருந்த சிறைத் தண்டனையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி சம்பவம் நடந்தபோது மைனர் என சிறார் நீதிவாரியத்தில் நிரூபிக்கப்படவில்லை எனவும், சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.