தமிழ்நாடு

முதலமைச்சரை தகாத வார்த்தைகளால் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

Sinekadhara

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வேலப்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவுசெய்து பரப்பியதாக ஆரணி தாலுலா காவல் நிலையத்தில் ரவி என்பவர் புகார் அளித்திருந்தார். அதில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் செந்தில்குமார் தரப்பில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதி, முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.