ரயில் சேவைகள் பாதிப்பு
ரயில் சேவைகள் பாதிப்பு புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை வரும் விரைவு ரயில்கள், மின்சார ரயில் சேவைகள் பாதிப்பு!

PT WEB

சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் சென்ட்ரல் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணனூர் ரயில் பணிமனையில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில், ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய சூழலில், நிற்காமல் சிக்னலை தாண்டி சென்றது.

அதில், ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. டிப்போவில் இருந்து புறப்பட்டதால் ரயிலில் பயணிகள் யாரும் இல்லை, இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஆவடி ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டுள்ளதால் சென்னையிலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில், தமிழக மேற்கு மண்டலங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து சென்னை வரும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

மேலும் சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையிலான மின்சார ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அலுவலகம் மற்றும் பணிக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்துக்கு அதிக பனிமூட்டம் காரணமாக சிக்னல் தெரியவில்லையா? அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமா என ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.