சென்னை மாநகரின் இதயமாகவும், கலை, கலாசாரம்
ஆகியவற்றுடன் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ள எழும்பூர் தனி தொகுதியின் நிலவரம் குறித்து
பார்க்கலாம்.
தென் தமிழகத்தை தலைநகர் சென்னையுடன் இணைக்கும் எழும்பூர் ரயில் நிலையம், ஆசியாவிலேயே பழமையான அருங்காட்சியகம், சென்னை நகரின் அடையாளமான கூவம் நதியின் தடம் எனப் பல பெருமைகளைக் கொண்ட எழும்பூர், சட்டமன்றத் தொகுதியாக 1957ஆம் ஆண்டு உருவானது. 1967ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் எழுச்சிக்கு இளைஞர்கள் அளித்த ஆதரவில் எழும்பூர் தொகுதியில் அதுவரை இல்லாத அளவாக 74.42 சதவீத வாக்குகள் பதிவாகின. எழும்பூரில் நடைபெற்ற 15 தேர்தல்களில், 11 முறை திமுகவும், காங்கிரஸ் 2 முறையும், தேமுதிக சார்பில் போட்டியிட்டவேட்பாளர் ஒருமுறையும் வெற்றி பெற்றிருக்கின்றனர். சுயேச்சை வேட்பாளரும் ஒருமுறை வென்றுள்ளார். அதிக முறை திமுக வென்றிருக்கிறது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜான் பாண்டியனைவிடவும் 38,768 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்குப் பிறகு எழும்பூர் தொகுதியில் 65,677 ஆண் வாக்காளர்களும், 69,149 பெண் வாக்காளர்களும், 53 மூன்றாம் பாலினத்தவர்களும் என ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 879 வாக்காளர்கள் உள்ளனர். தி.மு.க சார்பில் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, அ.தி.மு.க சார்பில் அபிஷேக் ரங்கசாமி, நாதக சார்பில் சரண்யா, தவெக சார்பில் பிரபல மேடைப்பேச்சாளர் ராஜ் மோகனும் போட்டியிடுகின்றனர். சென்னை மாநகரைக் கடக்கும் கூவம், கடலில் கலக்கும் முன்பு பெரும்பகுதி எழும்பூரில் பயணிக்கின்றது. நகரின் மையப்பகுதியில் ஓடும் கூவத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்த தேர்தலிலும் முன்வைக்கப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசல் மற்றும் வர்த்தகப் பகுதிகளின் மேம்பாடு குறித்த வாக்காளர்கள் கோரிக்கைகளுக்கும் வேட்பாளர்கள் செவிசாய்க்க நேரிடும்.