தமிழ்நாடு

ஓட்டுநரை அரிவாளால் வெட்டி, நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பல் - சென்னையில் கொடூரம்..!

webteam

சென்னையில் ஓட்டுநரை அரிவாளால் வெட்டிவிட்டு, நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை பள்ளிகரணை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம் பிரதான சாலை, நேரு நகர் சந்திப்பில் நேற்றிரவு ஓட்டுநர் முத்து செல்வம் (35) என்பவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது ராஜேஷ் என்பவரும், அவருடன் வந்த மூன்று பேரும் முத்து செல்வத்தை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். அவர்கள், “முருகாவை எதிர்த்து நீ ஊர்ல வாழ முடியுமா” எனக் கூறிக்கொண்டே அவரது தலையிலேயே வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், முத்து செல்வம் மீது நாட்டு வெடிகுண்டையும் அவர்கள் வீசியுள்ளனர்.

இதில் முத்து செல்வத்திற்கு இடதுபக்க காது, கழுத்து, கை, கை விரல்கள், வலது கால், இடது கால் என பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட முத்து செல்வம், பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பள்ளிகரணை போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதிமுகவை சேர்ந்தவர் முருகன் என்பதும், வெட்டப்பட்டவர் திமுகவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்ததுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வர உள்ள சூழ்நிலையில், அதன் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகித்துள்ளனர்.