தமிழ்நாடு

அம்மா உணவகங்களில் சப்பாத்தி - சென்னை மாநகராட்சி விளக்கம்

அம்மா உணவகங்களில் சப்பாத்தி - சென்னை மாநகராட்சி விளக்கம்

Sinekadhara

கடந்த 10 நாட்களாக சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் சப்பாத்தி வழங்கப்படுவதில்லை என எழுந்த குற்றச்சாட்டுக்கு சென்னை மாநகராட்சி விளக்கமளித்திருக்கிறது. 

அதில், ‘’சென்னை மாநகராட்சியின் 403 அம்மா உணவகங்களிலும் இரவு உணவு வேளையில் சப்பாத்தி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு நிதி நெருக்கடி நிலையிலும் இந்த அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அம்மா உணவகங்களுக்கு தேவையான அரிசி மற்றும் கோதுமை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாகவும், உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, எண்ணெய் மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் கூட்டுறவு பண்டக சாலைகளிலிருந்தும் பெறப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்படும் பொருட்களில் கோதுமை தனியார் ஆலைகளில் மாவாக அரைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோதுமை அரைக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக கடந்த 10 நாட்களாக ஒருசில மண்டலங்களில் உள்ள ஒருசில அம்மா உணவகங்களில் மட்டும் சப்பாத்தி வழங்குவதற்கு பதிலாக இரவு நேரத்தில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது.

தற்போது தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்து அம்மா உணவகங்களிலும் சப்பாத்தி இரவு வேளைகளில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான சமையல் பொருட்களும் அனைத்து அம்மா உணவகங்களுக்கும் எப்போதும்போல வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 403 அம்மா உணவகங்களில் பணியில் உள்ள எந்த ஒரு சுய உதவிக்குழு உறுப்பினரும் பணியில் இருந்து நீக்கப்படவில்லை. அனைத்து அம்மா உணவகங்களிலும் விற்பனைக்கு ஏற்ப சமச்சீராக இருக்கும் வகையில் உறுப்பினர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்திருக்கிறது.