தமிழ்நாடு

கையை அறுத்துக் கொண்டு வழிப்பறி நாடகமாடிய பெண் - எச்சரித்த போலீஸ்

webteam

சென்னை அருகே தனது கையை தானே அறுத்துக் கொண்டு வழிப்பறி நடந்ததாக மாணவி ஒருவர் நாடகமாடியுள்ளார். 

தமிழ்நாட்டில் வழிப்பறி சம்பவங்கள் அவ்வப்போது அறங்கேறி வருகின்றன. ஆனால் தற்போது ஒரு பெண் வழிப்பறி நடந்தது போல் ஒரு கற்பனை கதையை புகாராக அளித்துள்ளார். அவர் தனக்கு நேர்ந்த பிரச்னையை மறைக்க வழிப்பறி கதையை  அவிழ்த்துவிட்டுள்ளார். 

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரி முடிந்து வீடு திரும்பும் போது இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தமது செல்போனை பறிக்க முயன்றதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் அந்த மாணவியின் கையை அறுத்துவிட்டு தப்பியோடியதாக  புகாரும் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவிகளை ஆய்வு செய்து பார்த்தப் போது அவ்வாறு ஒரு சம்பவம் நடந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, போலீசாருக்கு புகார் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. 

ஆகவே புகார் கொடுத்த அந்தப் பெண்ணை மறுபடியும் அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்தப் பெண் தனது தோழனுடன் ஏற்பட்ட பிரச்னையால் தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டதாக உண்மையை போட்டு உடைத்துள்ளார். மேலும் இந்த விவகாரம் வீட்டில் தெரியாமலிருக்க இந்த வழிப்பறி நாடகத்தை நடத்தியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண்ணை எச்சரித்து அனுப்பிவைத்தனர்.