தமிழ்நாடு

சென்னை: மின்சாரம் தாக்கி கேபிள் ஆப்ரேட்டர் உயிரிழப்பு

kaleelrahman

சென்னை மதுரவாயல் அருகே மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன கேபிள் ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூரை அடுத்துள்ள கோவூர், தண்டலம், எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (35). இவர், தனியார் நிறுவனத்தில் கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வானகரம், செட்டியார் அகரம் அருகே பள்ளம் தோண்டி கேபிளை பழுது பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது வயரில் இணைப்பு கொடுக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயங்கினார். இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேஷ்குமார் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மதுரவாயல் போலீசார் உயிரிழந்த ராஜேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.