தமிழ்நாடு

சென்னை: குண்டும் குழியுமான கொரட்டூர் சாலை: விரைந்து சீர்செய்ய பொதுமக்கள் கோரிக்கை

kaleelrahman

சென்னை கொரட்டுர் அருகே சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சென்னை கொரட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்து 200அடி சாலை வரை உள்ள பிரதான சாலையில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த சாலை 2 கி.மீ. தூரத்திற்கு, மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அப்பகுதியை கடக்கும் இரு சக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் அங்குள்ள பள்ளங்களால் அவ்வப்போது விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். மழை பெய்யும் போது அந்த சாலைகளின் நிலைமை மேலும் மோசமாகிறது.

இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளி வாகனங்கள் மற்றும் சைக்கிள் பயன்படுத்தும் மாணவ - மாணவியர் உட்பட பலரும், சேதமடைந்த சாலையை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறும் அப்பகுதி மக்கள் இந்த சாலையை விரைவாக சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.