சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்று பிராட்வே பேருந்து நிலையம். சென்னை உயர்நீதிமன்றம், கொத்தவால்சாவடி மார்க்கெட், பல்வேறு கடைகள் இருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு போக்குவரத்து வளாகம் கட்டும் பணி தொடங்க இருக்கிறது.
இதனால் ராயபுரம் ரயில் நிலையம் அருகில் 3.45 ஏக்கர் பரப்பளவில் இராயபுரம் போர்ட் டிரஸ்ட் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் அமைகிறது. இதனால் பயணிகளுக்கு இருக்கை வசதிகள், குடிநீர் வசதி, சி.சி.டி.வி கேமிரா போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஒரே நேரத்தில் 200 க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் ராயபுரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. மாமல்லபுரம், கிளாம்பாக்கம், திருவேற்காடு, பூந்தமல்லி, தாம்பரம், திருவெற்றியூர் என பல வழித்தடத்தில் இயக்குவதால் ஓட்டுநர், நடத்துனர்களுக்கும் ஒய்வறைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
பணிகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது நிழற்குடை, பயணிகள் அமர்விடம், கழிப்பறை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதிகள் கொண்டு வர பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தனர்.