தமிழ்நாடு

சென்னை: ஓம்கார ஆசனம் செய்து உலக சாதனை படைத்த 7 வயது சிறுவன்

webteam

பூந்தமல்லியில் 7 வயது சிறுவன், கடினமான ஓம்கார ஆசனத்தை 6 நிமிடங்களுக்கு மேல் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னையை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் பாபு ரவி - சரண்யா தம்பதியர். யோகா மாஸ்டரான பாபு ரவிக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் தர்ஷித் (7) பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயது முதலே யோகாசனங்களை கற்றுவந்த தர்ஷித், அதில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக யோகாசனங்களில் மிகவும் கடினமான ஓம்கார ஆசனத்தில் பயிற்சி எடுத்து வந்துள்ளார். இதற்கு அவரது அப்பா பாபு ரவி முழு முயற்சியும் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்ற பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் தர்ஷித் ஓம்கார ஆசனத்தில் அமர்ந்து தலையில் கண்ணாடி டம்ளரில் தண்ணீர் வைத்தவாறு 6.14 நிமிடங்கள் ஆசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். தர்ஷித்தின் இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரிக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றது.

இதற்கு முன்பு ஓம்கார ஆசனத்தில் இதுபோல 2.45 நிமிடங்கள் செய்ததே சாதனையாக இருந்தது. தர்ஷித் அந்த சாதனையை முறியடித்ததுடன் மூன்று மடங்கு நேரம் அதிகமாக செய்து அசத்தியுள்ளார். தர்ஷித்தின் இந்த சாதனையை யோகா மாஸ்டர்கள் மற்றும் உறவினர்கள் பாராட்டினர்.