தமிழ்நாடு

‘சென்னையில் பைக் திருட்டு, ரேஸ், வழிப்பறி’ - மாஸ்டர் பிளான் போட்டு கும்பலோடு பிடித்த போலீஸ்

‘சென்னையில் பைக் திருட்டு, ரேஸ், வழிப்பறி’ - மாஸ்டர் பிளான் போட்டு கும்பலோடு பிடித்த போலீஸ்

webteam

சென்னையில் பைக் திருட்டு, ரேஸ் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 5 பேர் திருட்டு கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை வேப்பேரி முத்துகிராமணி தெருவைச் சேர்ந்தவர் நிர்மல்குமார். கடந்த 11ம் தேதி இவரது ரூ.2 லட்சம் மதிப்புள்ள கேடிஎம் சொகுசு பைக் திருடுபோனது. இதுதொடர்பாக வேப்பேரி காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதையடுத்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில், இணை ஆணையர் ஜெயகவுரி, கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. வேப்பேரி உதவி ஆணையர் மகேஷ்வரி தலைமையில் விசாரணையை தொடங்கிய இந்த தனிப்படை, திருடு நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

அதன்மூலம் திருடர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து சென்னை எம்கேபி நகரைச் சேர்ந்த பைக் திருடர்கள் அஜீத்குமார், ஜான் சாமுவேல் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் இன்னும் 3 பேருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கும்பலில் ஒருவன் பைக் ரேஸில் ஈடுபட்டு வந்துள்ளார். ரேஸில் உடையும் பைக்கின் உதிரிப்பாகங்களை, சாலையோரம் நிற்கும் பைக்கில் இருந்து திருடும் அந்த நபர், பின்னாளில் பைக் திருடனாக மாறியுள்ளார். அவ்வாறு திருடப்படும் பைக்குகள் மூலம் இந்தக் கும்பல், ரேஸ், வழிப்பறி, செல்போன் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதையடுத்து பிடிபட்ட இரண்டு பேரை பேச வைத்து பாண்டிச்சேரியில் பதுங்கியிருந்த பைக் திருடன் சந்தோஷ்குமாரை வரவழைத்த காவல்துறையினர், அவனை மாஸ்டர் பிளான் போட்டு மடக்கிப்பிடித்துள்ளனர். அத்துடன் திருட்டு பைக்கை விற்று கொடுத்த வியாசர்பாடி பிருத்விராஜ், கொடுங்கையூரைச் சேர்ந்த பாலாஜி ஆகியோரை வளைத்துப்பிடித்துள்ளனர். செய்தனர். இதில் சந்தோஷ்குமார் மீது மாதவரம், பட்டினப்பாக்கம் சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.