சென்னையில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்திற்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தாலும், அதனால் தங்களின் வணிகம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை மாநகராட்சி முதற்கட்டமாக பாண்டிபஜார், புரசைவாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்து 532 வாகனங்களை நிறுத்தும் வகையில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இத்திட்டத்தை பல்வேறு இடங்களுக்கு விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் மக்கள் தங்களது ஸ்மார்ட் போனில் ‘GCC SMART PARKING’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தங்கள் விவரங்களையும் மற்றும் வாகன விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த பின்னர் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து அருகில் எங்கே வாகனம் நிறுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம். வாகன கட்டணங்களை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, கூகுள் பே , பேடிஎம் மூலம் செலுத்தலாம். இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். வாகன ஓட்டிகள் மத்தியில் இந்த திட்டத்திற்கு வரவேற்பு காணப்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தால் வணிகம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தில் 20 சதவீத இடங்கள் இருசக்கர வாகனங்களுக்கும், 5 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை கண்காணிக்க மொத்தம் 460 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் வசதிக்காக கொண்டுவரப்படும் இந்த திட்டம் எல்லா தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.