செய்தியாளர்: ஆனந்தன்
நடிகை கௌதமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், "அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது சொத்துக்களை அபகரித்ததாக கொடுத்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேபோல் நீலாங்கரையில் உள்ள ரூ.9 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள சொத்தையும் அபகரித்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அங்கு சட்டவிரோதமாக மாநகராட்சி கட்டட அனுமதியும், மின்சார இணைப்பும் பெற்று கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இதுதொடர்பாக நான் புகார் அளித்ததை அடுத்து கடந்தாண்டு ஜனவரி மாதம் அந்த நிலத்தில் கட்டப்பட்ட கட்டுமானத்தை பூட்டி சீல் வைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால் பின்னர் அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை இடிப்பதற்கு, அதிகாரிகள் என்னிடம் 96,000 ரூபாய் கேட்டனர்.
இந்நிலையில் தனது வாட்ஸ்-ஆப் குரூப்பில் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் சிலர் மிரட்டுகின்றனர். வரும் 15ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்திற்கு முன்பு சட்ட உதவி சங்கம் என்ற அமைப்பின் பெயரில் எனக்கு எதிராக இந்த நிலத்தில் உள்ள கட்டுமானத்தை இடிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கூறி போஸ்டர் அனுப்பி மிரட்டுகின்றனர். எனவே மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இருந்தது.