தமிழ்நாடு

சென்னை: அதிவேகமாக வந்த பைக் மோதிய விபத்து – கைக் குழந்தையுடன் பெண் உயிரிழப்பு

webteam

சென்னை, அமைந்தகரை பகுதியில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கைக் குழந்தையுடன் பெண் உயிரிந்தார்.

சென்னை, அமைந்தகரை பகுதியில் உள்ள அண்ணா நினைவு வளையம் அருகே என்.எஸ்.கே.நகரைச் சேர்ந்த பூங்குழலி( 28) என்பவர் தனது 6 மாத பெண் குழந்தையுடன் இன்று அதிகாலை சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, மது போதையில் பெண் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பூங்குழலி மற்றும் அவரது கைக்குழந்தை மீது வேகமாக மோதியுள்ளார். இதில், பூங்குழலி மற்றும் அவரது கைக் குழந்தையும் தூக்கி வீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூங்குழலி, மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இளைஞர் மற்றும் இளைஞருடன் வந்த பெண்ணை, அண்ணா நகர் கே-4 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.