தமிழ்நாடு

சென்னை: விளையாடிக் கொண்டிருந்த குழந்தை: 7வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு

kaleelrahman

சென்னை ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் வினிதா. இவரது கணவர் விஜயகுமார். கடந்த ஒரு வடத்திற்கு முன்பு இறந்து விட்ட நிலையில், வினிதா தனது இரண்டரை வயது பெண் குழந்தை கவாஷ் ஷூடன் சென்னை ஓட்டேரி ஸ்டீபன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று வீட்டின் சோபாவின் மீது ஏறி நின்று ஜன்னலை திறந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக 7-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் வினிதா மற்றும் குடும்பத்தினர் குழந்தையை சிகிச்சைக்காக புளியந்தோப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த ஓட்டேரி போலீசார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்