தமிழ்நாடு

சென்னை: கொரோனா பாதித்த 11 வடமாநில தொழிலாளர்கள் தப்பிச் சென்றதாக புகார்

kaleelrahman

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கொரோனா தொற்று பாதித்த வடமாநில தொழிலாளர்கள் 11 மாயமானதாக வெளியான தகவல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை அம்பத்தூர் மண்டல சுகாதாரத்துறை ஆய்வாளராக இருப்பவர் பாரதிராஜா (36). இவர் அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், அம்பத்தூர் எஸ்டேட்டில் இயங்கி வரும் கம்பெனியில் விதிமுறையை மீறி பணி செய்து வந்ததால் அந்த கம்பெனிக்கு சுகாதாரத்துறை சார்பில் சீல் வைத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அங்கு வேலை செய்து வந்த 34 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், நேற்று 12 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு சென்று பார்த்தபோது ஒருவர் மட்டுமே இருந்தார். தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் செல்போனுக்கு வந்த குறுந்தகவலை அறிந்த மற்ற 11 பேர் தங்கிவந்த கம்பெனியிலிருந்து தப்பிச் சென்றனர்.

ஒடிஷாவை சேர்ந்த அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தனர். அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொரோனா நோயாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.