தமிழ்நாடு

சென்னை: சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ... நூலிழையில் தப்பித்த குடும்பம்!

webteam

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து விபத்துகுள்ளானதில், காரில் சென்ற குடும்பத்தினர் நூலிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் சென்னை சேலையூர் அருகே நடந்துள்ளது.

சென்னை சேலையூரை அடுத்த சந்தோஷபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வர துவங்கியுள்ளது. இந்நிலையில் உடனடியாக சுதாரித்துக் கொண்ட கார் ஓட்டுநர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கி விட்டார். காரில் இருந்தவர்களும் இறங்கி விட்டனர்.

சிறிது நேரத்தில் அந்த புகையானது தீயாக மாறி மளமளவென கார் முழுவதும் பரவி எரிய துவங்கியது. இதனால் வேளச்சேரி பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது.

விசாரணையில் காரை அருண்குமார் என்பவர் ஓட்டி வந்ததாகவும், குடும்பத்தோடு அவர் பள்ளிகரணையில் இருந்து தூத்துக்குடிக்கு திருமண நிகழ்விற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய போது சந்தோஷபுரம் அருகே கார் தீப்பிடித்ததாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.