சென்னை கொடுங்கையூரில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் அருகிலேயே இந்தக் கொள்ளை நடந்திருப்பதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னை கவியரசு கண்ணதாசன் நகர் அபிராமி அவின்யு 8-வது தெருவை சேர்ந்தவர் எஸ்.பாலசந்தர். இவர் மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி ஹைதராபாதில் கணவருடன் வசித்து வருகிறார். மகன் பணி நிமித்தமாக புனேயில் வசித்து வருகிறார். பாலசந்திரன் தமது மனைவியுடன் கடந்த 13 ஆம் தேதி தமது மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இன்று வீட்டிற்கு வந்து பாரத்தபோது வீட்டின் கதவு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பக்கத்தில் இருந்த கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது.
காவல்துறையினர் வந்து பார்த்துபோது விசாரணையில் 35 சவரன் தங்க நகைள், பூஜை அறையில் வைக்கபட்டிருந்த 1 கிலோ எடையுள்ள வெள்ளி சாமி சிலைகள், பூஜை பொருட்கள், 10 ஆயிரம் மதிப்புள்ள கை கடிகாரங்கள், வீட்டின் சுவரில் மாட்டியிருந்த 32 இன்ச் எல்ஈடி டிவி மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீஸார் அந்த பகுதியில் பொருத்தபட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.