தமிழ்நாடு

செஞ்சி: சடலத்தை வயல்வெளியில் சுமந்து செல்லும் அவலம் - பாதை கேட்டு கோரிக்கை

kaleelrahman

செஞ்சி அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் மூதாட்டியின் சடலத்தை வயல் வெளியில் சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்களவாய் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 100 ஆண்டுகளாக ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை, தனிநபர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதால் இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்ல வழி இல்லை.

இதனால் வயல்வெளியில் நெல் பயிர்களுக்கு இடையே சேற்றில் மூதாட்டியின் சடலத்தை சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்றனர். மேலும் தங்கள் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட சுடுகாட்டு பகுதிக்கு செல்ல பாதை அமைத்துத் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, செஞ்சி வட்டாட்சியர் பழனி மற்றும் செஞ்சி காவல் ஆய்வாளர் தங்கம் மற்றும் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது உடனடியாக பாதை அமைத்துத் தர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.