தமிழ்நாடு

செங்கல்பட்டு: நரிக்குறவரை தாக்கி துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள் தப்பியோட்டம்

kaleelrahman

அச்சரப்பாக்கம் அருகே வேட்டைக்குச் சென்ற நரிக்குறவரின் துப்பாக்கியை பிடுங்கி அவரை சுட்டுவிட்டு இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் நரிகுறவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே சிறுகரணை நரிக்குறவர் குடியிருப்பு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் முயல், காடை, கௌதாரி உள்ளிட்ட பறவைகளை பிடித்து விற்பது. பெண்கள் வகை வகையான பாசி, ஊசி, மணிகள் பின்னி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நரிக்குறவ குடியிருப்பு பகுதியிலிருந்து முத்து என்ற நரிக்குறவர் புத்தமங்களம் கிராம பகுதியில் வேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 3 இளைஞர்கள் அவரை அடித்து துன்புறுத்தி அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பிடுங்கி அவரையே சுட்டு விட்டு நாட்டு கைத்துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டனர்.

நரிக்குறவர் முத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதையடுத்து நரிக்குறவரை தாக்கிய நபர்களை பிடிக்க வேண்டும். அவருடைய நாட்டு துப்பாக்கியை கைபற்றி தரவேண்டுமென நரிக்குறவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.