தமிழ்நாடு

செங்கல்பட்டு: வீடு புகுந்து அடகு கடை உரிமையாளரின் மனைவி கொலை; போலீஸ் விசாரணை

kaleelrahman

திருக்கழுக்குன்றத்தில் அடகு கடை உரிமையாளரின் மனைவி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பத்தேசந்த் (78). இவர், திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவருக்கு பிரேம்கவர் (70) என்ற மனைவியும் 4 மகன்களும் உள்ளனர் இந்நிலையில், நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு பத்தேசந்த் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் மனைவி பிரேம்கவர் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து பதறிப்போன அவர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு உயிரிழந்த பிரேம் கவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேம்கவர் எதற்காக யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர், இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.