ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் என்ற விதிகளை அமல்படுத்தக்கோரிய கே.கே.ராஜேந்திரன் வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிவது தொடர்பான வழக்கில் வாகனத்தில் செல்லும் இருவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல கார்களில் செல்வோர் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் என்ற விதிகளை அமல்படுத்தக்கோரிய கே.கே.ராஜேந்திரன் வழக்கு தொடுத்தார்.
இதயெடுத்து ராஜேந்திரன் வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், தமிழகத்தில் மோட்டார் வாகன விதிகளிலேயே ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் என்பது உள்ளது. ஹெல்மெட் விதிகளை அரசும், காவல்துறையும் முறையாக அமல்படுத்துவதில்லை அதனை அமல்படுத்துங்கள் என்று அறிவுறுத்தினர்.
மேலும் தேசியக் கொடியுடன் செல்லும் வாகனத்தின் இருப்பவர்களை கூட காவல்துறை மதிப்பதில்லை. நீதிபதிகளின் வாகனங்களை மட்டும் குறிப்பிடவில்லை அனைத்து வாகனங்களில் உள்ள தேசியக் கொடிகளையும் குறிப்பிடுகிறோம் என்றனர். மேலும் இதனையடுத்து இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனிடையே ஹெல்மெட், சீட்பெல்ட் பற்றி பள்ளி, கல்லூரிகளில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போதாது. தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் சட்டத்தை காவல்துறையினர் முதலில் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.