தமிழ்நாடு

காசோலை மோசடி வழக்கு: நடிகர் சிவாஜி கனேசனின் மகன், பேரன் உட்பட மூவருக்கு பிடிவாரண்ட்!

webteam

காசோலை மோசடி வழக்கில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் பேரன் துஷ்யந்த் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான அக்ஷய் சரின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் துஷ்யந்தின் மனைவி அபிராமி ஆகியோர் நிர்வகிக்கும் ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

வியாபார நடவடிக்கைகளுக்காக துஷ்யந்த் சார்பில் தலா 15 லட்சம் ரூபாய்க்கான இரண்டு காசோலைகளை கடந்த 2019 ஆம் ஆண்டு அளித்ததாகவும், ஆனால், போதிய பணம் இல்லாததால் இரண்டு காசோலைகளும் திரும்பி வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரிந்தும் வேண்டுமென்றே தங்களுக்கு காசோலை அளித்ததாகவும், இதுதொடர்பாக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ்க்கு பதிலளிக்காததுடன், தங்களது பணத்தையும் திரும்ப அளிக்கவில்லை என குற்றம சாட்டியுள்ளார்.

எனவே ராம்குமாரின் மகன் துஷ்யந்த், துஷ்யந்த்தின் மனைவி அபிராமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சைதாப்பேட்டை விரைவு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகன் கொடுக்க வேண்டிய பணத்திற்கு பொறுப்பேற்பதாக ராம்குமார் உத்தரவாதம் அளித்துள்ளதால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துஷ்யந்த், அபிராமி, ராம்குமார் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து, வழக்கு விசாரானையை பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.