ரஞ்சித் - இசைவாணி முகநூல்
தமிழ்நாடு

5 வருடங்களுக்குபின் சர்ச்சை ஆக்கப்படும் ஐயப்பன் பாடல்! கானா பாடகி இசைவாணி மீது புகார்! பின்னணி என்ன?

இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும், பிற மதங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் விதமாகவும் இந்த பாடல் அமைந்துள்ளதாகக் கூறி, ஓசூர் காவல் நிலையத்தில் சிவசேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கானா பாடல்கள் மூலம் அறியப்படுபவர் பாடகி இசைவாணி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் “ஐ யம் சாரி ஐயப்பா” என்ற பாடலை பாடியிருந்தார்.

சபரிமலை ஐயப்பன் சீசன் தொடங்கியுள்ள நிலையில், இசைவாணி பாடிய இந்த பழைய பாடல் தற்போது இணையதளத்தில் சர்ச்சை ஆக்கப்பட்டு வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களுக்கான அனுமதியில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பும் வகையில் அந்தப் பாடல் அமைந்திருந்தது.

இப்பாடல் ஐயப்ப பக்தர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாக பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், ’ஏசுவ நீ விட்டு போகாதே’ என்ற அவர் பாடிய கிறிஸ்துவ பாடல் என இந்த இரண்டு பாடல்களையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும், பிற மதங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் விதமாகவும் இந்த பாடல் அமைந்துள்ளதாகக் கூறி, ஓசூர் காவல் நிலையத்தில் சிவசேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவிக்கையில், ”பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக எனக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. எனக்கும் அந்த மனத்தாங்கல் இருக்கிறது. கார்த்திகை மாதம் என்பதால், உலகம் முழுவதும் ஐய்யப்பனை பக்தர்கள் தரிசித்து வந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இசைவாணி என்பவர் ஐய்யப்பன் குறித்தான மோசமான கருத்துக்கள் கொண்ட பாடலை பாடியுள்ளார்.

அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், திராவிட கழகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தால் அவர்களை கைது செய்வார்கள். ஆனால், ஆன்மீகத்திற்கு எதிராக குறிப்பாக இந்து மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தால் அதை கொண்டாடுபவர்களாகவும் இருக்கிறார். எனவே, உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கண்டிக்கதக்கது. இது அனைவரின் மனதையும் புண்படுத்துவதாக இருக்கிறது..” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவிக்கையில்,

”நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கழுத்தில் சிலுவையை அணிந்து கொண்டு ஐயப்பனை இழிவுபடுத்திய பாடகி இசைவானி மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இயக்குனர் ரஞ்சித் மீது தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்படும். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், உண்மையை மறைத்து, அந்த மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக இருக்கிறது என, சமூக வலைதளத்தில் பொய் செய்தியைப் பரப்ப முயற்சிப்பதின் மூலம், சமூகப் பதற்றத்தை உருவாக்கி விட முடியும் என முயல்கிறது ஒரு கூட்டம் என்றும், அடிப்படை உரிமையைக் காப்போம், இசைக்கலைஞர் இசைவாணியுடன் துணை நிற்போம் என்று தெரிவித்து, #WeStandWithIsaivani என்ற hastag ஐயும் பதிவிட்டு, தனது ஆதரவையும் தெரிவித்துள்ளது நீலம் பண்பாட்டு மையம்.

இது குறித்து நீலம் பண்பாட்டு மையம் நேற்றைய தினம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில்,

”அடிப்படை உரிமையைக் காப்போம், இசைக்கலைஞர் இசைவாணியுடன் துணை நிற்போம் கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் சபரிமலைக்குப் பெண்கள் செல்வது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம். பாலினப் பாகுபாட்டை முன்வைத்துப் பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக் கூடாது என்று தீர்ப்பளித்தது. அதை ஆதாரமாகக் கொண்டு மிகப்பெரிய விவாதமும் நடந்தது.

அதைத் தொடர்து நாட்டிலுள்ள முற்போக்கு இயக்கங்களும் பெண்களின் உரிமைக்கு ஆதரவாக நின்றன. இதே காலகட்டத்தில்தான், நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் 'The Casteless Collective' என்கிற இசைக்குழு உருவானது. சமூகப் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, சமூக உரிமைகளைக் கோரும் பாடல் வரிகளோடு 'The Casteless Collective' பல பாடல்களை இயற்றியது. சாதிய ஏற்றத்தாழ்வுகள். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலை, உணவுப் பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட்டவைகள் இதில் அடக்கம். அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்த உரிமையைக் கோருகிற பாடல்களாகத்தான் அவை இயற்றப்பட்டன. 1 am sorry Iyyappa என்கிற பாடலும் ஆண்டாண்டு காலமாய் இங்கு பேசப்பட்டு வரும் கோயில் நுழைவு உரிமையைக் கோருகிற வரிகளோடு துவங்கி, பின் பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் பொதுவான உரிமைகளைக் கோரும் பாடலாக அமையப்பெற்றது.

இப்பாடலை பாடியது இசைவாணி, எழுதி இசையமைத்தது The Casteless Collective 2018ஆம் ஆண்டு 'மெட்ராஸ் மேடை' என்கிற இசை நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட The Casteless Collective' இசைக்குழு. அதற்குப் பின்னால் பல்வேறு மேடைகளில் பாடல்களைப் பாடி வருகிறது. ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு, இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடப்பட்ட பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு, கடந்த ஒரு வார காலமாகச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறது ஒரு குழு. அடிப்படையில் அது ஐயப்பன் சம்மந்தப்பட்ட பாடலே அல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளைக் கோரும் வரிகளில் கோயில் நுழைவைக் கோரும் உரிமையும் அதில் இடம்பெற்றிருந்தது.

இந்த முழு உண்மையை மறைத்து, அந்த மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக இருக்கிறது என, சமூக வலைதளத்தில் பொய் செய்தியைப் பரப்ப முயற்சிப்பதின் மூலம், சமூகப் பதற்றத்தை உருவாக்கி விட முடியும் என முயல்கிறது ஒரு கூட்டம். சமூகப் பொறுப்புள்ள ஏராளமான ஆளுமைகளால் அங்கீகரிக்கப்பட்டு. பாராட்டப்பட்ட குழுவாக 'The Casteless Collective' குழு இயங்கி வந்திருக்கிறது.

வெகுஜன தொலைக்காட்சிகளில், சமூக ஊடக தளங்களில் இசைக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. பாடகர் இசைவாணி கடந்த 2020ஆம் ஆண்டு பிபிசி அங்கீகரித்த சிறந்த நூறு பெண் ஆளுமைகள் பட்டியலிலும் இடம் பிடித்து தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். இத்தனை பொறுப்புடனும், போற்றத்தக்கத் திறனுடனும் முன்னேறி வரும் பாடகர் இசைவாணியை, கடந்த ஒரு வார காலமாக ஆபாசமாகச் சித்திரித்தும், தொலைபேசியில் மிரட்டியும், சமூகவலைதளத்தில் அவதூறுகளைப் பரப்பியும் வருகின்றனர். ஒரு கலைஞர் மீது வைக்கப்படும் குறி என்பது தனிநபர் சம்மந்தப்பட்டது கிடையாது.

அந்த மிரட்டல் இனி உருவாகி வரவிருக்கும் கலைஞர்களுக்கும் சேர்த்தே என்பதுதான் இதிலுள்ள பேராபத்து, சட்டப்படி சம்மந்தப்பட்டவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகர காவல்துறை உரிய நடவடிக்கைக்கு எடுக்கும் என்று நம்புகிறோம். கோயில் நுழைவு என்பது அடிப்படை உரிமை. சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மறுக்கப்பட்டவைகளைக் கேள்வி கேட்டுக்கொண்டே வந்ததின் விளைவாகத்தான் இன்று அவை சட்டமாக்கப்பட்டு இருக்கின்றன. அந்த அடிப்படை உரிமைக்கு எதிரான செயல்பாட்டைக் கண்டித்துத் தான் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டது. இந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு செயல்படும், ஜனநாயகத்தை நம்பும் சக்திகள் ஒவ்வொருவரும், பாடகர் இசைவாணி அவர்களுடன் துணை நிற்க கோருகிறோம்.” என்று பதிவிடப்பட்டுள்ளது.