தமிழ்நாடு

சாதி பெயரை சொல்லி பேசியதாக புகார்: அமைச்சர் ராஜகண்ணப்பனின் துறை மாற்றம்

Veeramani

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று ராஜ கண்ணப்பன், சிவசங்கர் ஆகியோரின் துறைகளை மாற்றுவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை பதவியேற்றபின்பு நடக்கும் முதல் அமைச்சரவை மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.



பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் சிவசங்கர், இவர் தற்போது அரியலூர் மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார்.

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரைக்கூறி அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாக புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்துத்துறை பணியாளர்களுக்கு வழங்க வெளியில் இருந்து இனிப்புகளை வாங்குவதாக ராஜகண்ணப்பன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.