தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... கார் டிரைவர் கைது

kaleelrahman

பல்லடம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கார் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பள்ளிபாளையம் பகுதியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்படவே சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது வளையபாளையம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சுப்பிரமணி என்பவர் திருமண ஆசை காட்டி தன்னை கர்ப்பிணி ஆக்கியதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருப்பூர் மாவட்ட சைல்டு ஹெல்ப் லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் கூறியதாக தெரிய வருகிறது. இதுகுறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி மற்றும் மாவட்ட சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் கார் ஓட்டுநர் சுப்பிரமணி (21) என்ற இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கர்ப்பிணி மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.