தமிழ்நாடு

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

JustinDurai

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலூர், கீழவளவு, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, சென்னகரம்பட்டி, கிடாரிப்பட்டி, வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான காளவாசல், தெப்பக்குளம், கோரிப்பாளையம், சிந்தாமணி, ஆரப்பாளையம், சிம்மக்கல், பழங்காநத்தம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது மழை பெய்தது. செட்டிநாயக்கன்பட்டி, கல்லுப்பட்டி, ராஜாக்காப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த இரண்டு தினங்களாக வெயில் உச்சம் தொட்ட நிலையில், மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தது. மல்லி, வன்னியம்பட்டி, மம்சாபு‌ரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

தேனி மாவட்டத்தில் இரவு நேரத்தில் திடீரென பரவலாக மழை பெய்தது. தேனி, ஆண்டிபட்டி, வீரபாண்டி, அல்லிநகரம் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. மழையால் நீர் நிலைகளின் நிரம்பி வருவதால் வி‌வசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, மதுரை மாவட்டம் பெரியார் நிலையம் அருகே கடை ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

வெப்பச்சலனம் காரணமாக, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், தருமபுரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்து‌டன் காணப்படும் எனவும் அக்டோபர் 9ஆம் தேதி அந்தமான் ஒட்டியுள்ள‌ பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.