தமிழ்நாடு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

webteam

தமிழகத்தில் வரும் 28-ஆம் தேதி வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. மேலும், சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

வடமாவட்டங்களில் கடலோரத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்துவருகிறது. மாநிலத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் நேற்று 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதாவது சிவகங்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி. ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவடங்களில் அக்டோபர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம், ஆந்திர கடற்கரைப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வடகிழக்கு மற்றும் கிழக்கில் இருந்து காற்று வீசும் நிலையில், அக்டோபர் 28 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.