வடக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 30ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்தது. மேலும் அங்காங்கே கனமழையும் பெய்தது. இந்த நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடல் - வடக்கு ஆந்திரா இடையே வரும் 30ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்காரணமாக, வளி மண்டல சுழச்சி ஏற்பட்டு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு தென் மாநிலங்களைப் பொறுத்தவரை கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் எனவும் தமிழகத்தைப் பொறுத்தவரை வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக லேசான மழை முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவைவிட 36 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.