தமிழ்நாடு

நிரந்தர சட்டம் எதிரொலி: ஜல்லிக்கட்டு அறிவிக்கையை வாபஸ் பெற்றது மத்திய அரசு

webteam

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரசட்டம் இயற்றப்பட்டதை அடுத்து, அதுதொடர்பான கடந்த 2016ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் வகையில் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 7-ல் மத்திய அரசு அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. இந்த அறிவிக்கைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறவில்லை என்பதால் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்தநிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய அரசின் மிருகவதைத் தடுப்பு சட்டத்தில் மாநில அரசின் சார்பில் திருத்தங்கள் செய்யப்பட்டு அந்த சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. இந்தசட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டதை அடுத்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை வாபஸ் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்தார். இதுதொடர்பாக நாளை மனுத் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அறிவிக்கைக்கு தடை விதித்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இதனால் மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்படும் என்று தெரிகிறது.