Anitha Radhakrishnan
Anitha Radhakrishnan pt web
தமிழ்நாடு

மத்திய அரசுக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறையில்லை – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடலில் மீன் பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியை அவர்களது குடும்பத்திற்கு வழங்கினார்.

boat

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலில் மீன் பிடிக்கச் சென்று காணாமல்போன மீனவர்களுக்கு இதுவரை மத்திய அரசு இழப்பீடு வழங்கவில்லை, எனவே தமிழக அரசு தமிழகம் முழுவதும் மாயமான 205 மீனவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் காணாமல்போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

கச்சத்தீவு மீட்பு மற்றும் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை வசமுள்ள படகுகளை மீட்டுத் தருவதாக பிரதமர் மோடி, அண்ணாமலை, என பலரும் வாக்குறுதி அளித்தனர். இந்நிலையில் அதற்கான நடவடிக்கையை இதுவரை மத்திய அரசு எடுக்கவில்லை.

தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வசமுள்ள படகுகளை மீட்டு கொடுக்காமல் மீனவர்களை ஏமாற்றி விட்டார். மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதும் அவர்களது வாழ்வாதாரம் மீதும் எந்த அக்கறையும் காட்டவில்லை எனத் தெரிய வருகிறது.

fisherman

மத்தியில் புதிதாக அமைய உள்ள I.N.D.I.A கூட்டணி, தமிழக மீனவர்கள் மீது அக்கறை காட்டி இலங்கை வசமுள்ள படகுகளை உடனடியாக மீட்கவும், கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்கும். அதற்கு தமிழக முதல்வர் அழுத்தம் கொடுப்பார் என்று தெரிவித்தார்.