தமிழ்நாடு

“மேகதாது அணைக்கு அனுமதி தரவில்லை” - மத்திய அரசு பதில் மனு

“மேகதாது அணைக்கு அனுமதி தரவில்லை” - மத்திய அரசு பதில் மனு

webteam

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  இந்தப் பதில் மனுவில் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட ஆய்வறிக்கைக்கு (DPR) தயாரிக்கவே மட்டுமே அனுமதி அளித்துள்ளோம். இந்த அனுமதி என்பது அணை கட்டுவதற்கு கொடுத்த அனுமதி கிடையாது. எனவே இது  உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல, தீர்ப்பை அவமதிக்கும் செயலும் அல்ல என்று மனுவில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் அணை கட்டுவது தொடர்பான ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மத்திய நீர் ஆணையத்தின் நிபுணர்கள் சம்மந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து பார்த்த பின்னரே அந்த அணை தேவைதானா என்பதை தீர ஆலோசித்து அவர்கள் முடிவெடுப்பர். பின் அந்த அறிக்கை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழுவுக்கு அனுப்பப்படும். அடுத்த கட்டமாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அந்தத் திட்டத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பும். ஆகவே, இப்போது அளிக்கப்பட்டுள்ள அனுமதி விரிவான திட்ட அறிக்கைக்குதான். அணை கட்டுவதற்கான அனுமதி  அல்ல.

இது மட்டும் இல்லாமல், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தமிழக, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கப்படும். கர்நாடகா மாநிலத்தின் கருத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு ஆலோசனை  நடத்தப்படாது.மேலும் விவசாயிகளின் நலனுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் எந்த முடிவும் எடுக்கப்படாது.

எனவே அணை கட்டுவதற்கான அனுமதியே வழங்காத போது தற்போது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு ஆதாரமற்றது. அவர்கள் மனுவில் கூறும் தகவல்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல.அதனால் தமிழக அரசு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளது.