மும்மொழிக்கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகம் மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழை படிக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. இதனை ஏற்காததால்தான் தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ.2152 கோடியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. என்று தெரிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , NEP (புதிய கல்விக் கொள்கை) ஏற்றால்தான், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என்று சமீபத்திய நிகழ்வு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இவரது பேச்சுக்கு, கல்வியாளர்கள், மாணவr அமைப்பினர், அரசியல் தலைவர் என பலர் தங்களது பலத்த கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மத்திய அரசு எங்களை மிரட்டி அடிபணிய வைக்கப் பார்க்கிறீர்கள் என்றும் ,இது கட்சிக்கான நிதி அல்ல. மாணவர்களுக்கான நிதி என்றும் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!
எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..." என்று பதிவிட்டுள்ளார்.