தமிழ்நாடு

சென்னையில் நிறுவப்பட்ட மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அனுமதி

EllusamyKarthik

சென்னையில் நிறுவப்பட்ட மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், மரபணு பகுப்பாய்வுக் கூடம் நிறுவப்பட்டது. மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில், கொரோனா மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ்களை கண்டறிவதற்காக பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மரபணு பகுப்பாய்வகங்களுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு வந்தன. அதன் முடிவுகள் தாமதமாக பெறப்பட்டு வந்த நிலையில், சென்னையில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வேறு எந்த மாநில அரசாலும் இத்தகைய பகுப்பாய்வு மையம் அமைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள மருத்துவத்துறை அமைச்சர், இதன் மூலம் உருமாறிய கொரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நோய் தாக்கத்தினை பெருமளவு தடுத்திட இயலும் என்றும் கூறியுள்ளார்.