மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடல் நடுவே பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவத்தனர்.
இந்நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதிக்ககோரி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது.
தமிழ்நாடு அரசின் இந்த விண்ணப்பத்தை ஏற்ற மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, நிபந்தனைகளுடன் அவற்றுக்கு ஒப்புதல் வழங்கியது. இதுதொடர்பாக ஏப்ரல் 17ஆம் தேதி நடந்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள் என்னென்ன ?
1) ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
2) கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது
3) திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்
உள்ளிட்ட 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் நேப்பியர் பாலம் அருகே 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.