தமிழ்நாடு

தமிழகம் வரும் மத்திய ஆயுதப் படை... முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு?

webteam

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிப்ரவரி 25-ஆம் தேதி மத்திய ஆயுதப் படையினர் தமிழகம் வருகின்றனர்.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சியினரும் பரப்புரைகளில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். அடுத்தக்கட்டமாக விருப்பமனு பெறும் பணிகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள், வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணப்படும் இடங்கள் எல்லாம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இரண்டு கட்டமாக தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணையக் குழு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறது.

இதனால் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தலுக்காக பிப்ரவரி 25-ஆம் தேதி மத்திய ஆயுதப்படையினர் தமிழகம் வருகின்றனர். முதல் கட்டமாக ஆயுதப்படையின் 45 கம்பெனி போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வருகின்றனர்.

வழக்கமாக மத்திய ஆயுதப்படையினர் தேர்தல் நெருங்கும் சமயத்தில்தான்  குறிப்பிட்ட மாநிலத்திற்கு செல்வார்கள். ஆனால் தற்போது தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே அவர்கள் தமிழகத்திற்கு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.