தமிழ்நாடு

இலங்கைத் தமிழர்களைக் காத்திட மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்: டிடிவி.தினகரன்

Veeramani

நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் சூழலில், இலங்கைத் தமிழர்களைக் காத்திட மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் சூழலில், நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான அங்குள்ள தமிழர்களின் நலன் காப்பதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறையோடு செயல்பட வேண்டும்.



'இது வெளிநாட்டு விவகாரம்' என்று தட்டிக்கழித்துவிட நினைக்காமல், உறுதியான முடிவுகளை எடுத்து ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, இலங்கைத் தமிழர்களைக் காத்திட தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திட வேண்டும்.

துன்பத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இப்போதாவது உதவுவதன்மூலம், காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றழித்த பாவத்திற்கு தி.மு.க சிறிதாவது பரிகாரம் தேடிக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்