செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை பறிமுதல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். அத்தோடு வாகன விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கான அபராதத்தை 10,000 ரூபாயிலிருந்து 1 லட்சமாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்து விதிமீறல் பற்றி புகார் அளிப்பதற்காக எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது குறித்து டிஜிபியிடம் தகவல் பெற்று அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை பறிமுதல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.