தமிழ்நாடு

மக்களிடம் சிக்கிய செல்போன் திருடர் : சரமாரியாக தாக்குதல்

webteam

சென்னையில் அடுத்தடுத்து இரண்டு பேரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் மடக்கிபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

சென்னை குரோம்பேட்டை பகுதியில் ஜிஎஸ்டி சாலையோரம் பேருந்திற்காக காத்திருந்த ஜேம்ஸ் பிரபாகர் என்பவரிடம் இருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் செல்போனை பறித்துக் கொண்டு குரோம்பேட்டை ரயில்வே கிராசிங் வழியாக தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பெண் ஒருவரிடம் செல்போனை பறிக்க முயன்ற போது பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். 

மூன்று பேரில் இருவர் தப்பிச்செல்ல, பிடிபட்ட லோகேஷ் என்ற இளைஞரை பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபர் சேலையூரை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய சரவணன், சுரேஷ் ஆகியோரை குரோம்பேட்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.